Saturday, June 24, 2017

Coaching Class

பயிற்சி நிலையங்களை எப்பொழுது பயன்படுத்த
----------------------------------------------------------------------------
வேண்டும்?.
----------------------

(குறிப்பு: இது பயிற்சி நிலையங்களுக்கு எதிரான பதிவு அல்ல)

இன்று நன்றாக படிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர்களுக்குக் கூட TNPSC போன்ற போட்டித் தேர்வுகளில் எப்படி படிப்பது? எங்கே படிக்கத் தொடங்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எதைப் படிக்கக் கூடாது என்று தெளிவு இன்றி, குழப்பமான மன நிலை நிலவுகிறது.

விளைவு,  போட்டித் தேர்வுகளுக்குப்  படிக்க வேண்டும் என்று இன்று முடிவு செய்தால், மறுநாளே ஏதாவது ஒரு பயிற்சி நிலையத்தினை நாடுகிறார்கள். இது உங்களுக்கு எந்த வகையில் உதவும்?, அதிக பணம் கட்டி நாம் பயிலும் பயிற்சி மையங்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? சற்று விரிவாகப் பார்ப்போம்.

போட்டித் தேர்விற்குப் படிக்கும் ஒவ்வொருவரின் மன நிலையம் ஒரே மாதிரி இருக்காது. ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்கு, தன் எழுச்சி அதிகம் இருக்கும், எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் தானாகவே இருக்கும். அவராகவே கடின உழைப்பை மேற்க் கொள்வார்.  அவரது கடமையைச் செய்ய வேறு எந்த உந்துதலும் தேவைப்படாது. சுய நம்பிக்கை அதிகம் இருக்கும். நாமாகவே எதையும் சாதிக்க இயலும் என்ற தன்னம்பிக்கை இருக்கும். இவர்கள் பெரும்பாலும் பயிற்சி மையத்தினை நாடுவது இல்லை. இது தவிர, குடும்ப வறுமை மற்றும் பணி புரிவதால் நேரமின்மை என்று அந்தப் பக்கம் செல்லாதவர்களும் உண்டு.

மற்றொரு ரகம் உண்டு, இவர்களுக்கு படிப்பதற்கு ஒரு குழு வேண்டும். பாட சம்பந்தமான கலந்துரையாடல் மிகவும் பிடிக்கும். குழு நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவார்கள். இவர்களை தூண்டி விட ஒரு எப்பொழுதும் ஒரு  புற ஊக்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள். அடுத்தவர்களது படிப்பில் தங்களை ஒப்பிட்டு பார்த்து முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பயிற்சி நிலையங்களில் சென்று பயில்வது பிடிக்கும். இல்லை என்றால், நான் படிக்க மாட்டேன் என்று நம்புபவர்கள்.

ஒரு நல்ல பயிற்சி மையத்தின் நன்மைகள்:
------------------------------------------------------------------------------

** தடங்கல் இல்லாத வகுப்புகள்

** மாதிரித் தேர்வுகள்

** திருப்புதல்

** குழு கல்வி

** படிப்பதற்கான எளிய முறைகளைக் கற்றுக் கொடுத்தல்

** மாணவரின் திறமையை மேலும் வளர்த்தல்.

** நினைவாற்றலை மேம்படுத்தல்

**தரமான ஆசிரியர்கள்

எப்பொழுது பயிற்சி நிலையம் செல்ல வேண்டும்?
----------------------------------------------------------------------------

முதலில் குறைந்தது  இருபது வயது நிரம்பியவரே போட்டித் தேர்வுகளுக்கு வருகிறார். படிக்க இருப்பது ஆறு முதல் பத்து வரையிலான சமச்சீர் புத்தகங்கள். அட்டை டு அட்டை வேறு ஒருவர் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் அளவில் படிக்கக் கூடியவை என்று நிறைய பாடங்கள் உள்ளன. நாமாகவே படித்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உதாரணமாக, சிலருக்கு தமிழ் நன்றாக வரும். ஆனால் பொது அறிவியலில் பலவீனமாக இருப்பார்கள். சிலர் பொது அறிவியலில் பலமானவராகவும், தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பலம் குறைந்தும் காணப்படுவர். பெரும்பாலானோருக்கு கணிதத்தில் பிரச்சினை.

எனவே முதலில் நீங்கள், உங்களால் முடிந்த வற்றை அல்லது உங்களுக்கு பலம் என்று தோன்றுவதை, நாமாகவே இதனைப் படிக்க முடியும் என்று தோன்றும் பாடங்களை, தன் முயற்சியில் படிக்க வேண்டும். இதற்க்கு குறைந்தது, ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.

பழைய தேர்வுகளில் உள்ள வினா-விடைகளை படிக்கலாம். கேள்விகள் எவ்வாறு கேட்கப் படுகின்றன?, புத்தகத்தில் உள்ள வரிகள் எவ்வாறு கேள்விகளாக மாறுகின்றன? என்பதனை பழைய கேள்வி தாள்களை பார்த்தாலே நீங்களே புரிந்து கொள்ளலாம். கடந்த குரூப்-4 தேர்வில், பயிற்சிநிலையம் செல்லாமலே 186 சரியான விடைகளை அளித்தவரும் உண்டு.

பயிற்சி நிலையம் சென்று தேர்ச்சி அடையாதவரும் உண்டு. முதலில், உங்கள் மீதான நம்பிக்கையில், உங்களால் முடிந்த அளவு - நீங்களாகவே படித்து, அதிக பட்சம் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது என்று பாருங்கள். சராசரியாக படிக்கும் ஒருவர் கூட, தன் முயற்சியில் TNPSC யில் கேட்கப்படும் 200 கேள்விகளுக்கு 165 வரை சரியான விடை அளிக்க இயலும்.

இந்த 165 யை, எவ்வாறு 185 ஆக மாற்றுவது, 190 ஆக மாற்றுவது எனும் பட்சத்தில் நீங்கள் நல்ல பயிற்சி மையங்களில் ஒன்றை நாடலாம். ஏற்கனவே ஓரளவு படித்து இருப்பதால், அங்கு நடத்தப்படும் மாதிரி தேர்வுகளுக்கு விடை அளித்து உங்கள் நினவுத் திறனை அதிகரிக்கலாம், உங்களுக்கும் உங்கள் படிப்பின் மீது ஒரு நம்பிக்கை வரும்.

அப்படி இன்றி, நேற்று தான் படிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறீர்கள் என்றால், உடனே இன்று பயிற்சி மையங்களில் சேர்வது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

எப்பேர் பட்ட சிறந்த மையத்தில் சேர்ந்தாலும், நீங்கள் உங்கள் கடின உழைப்பைக் கொட்டினால் தான் தேர்ச்சி அடைய முடியும். நாம் அங்கு சேர்ந்து விட்டோம், எல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டு விடுவார்கள் என்று எண்ணினால் உங்கள் வெற்றி மிகக் கடினம். நீங்கள் உங்கள் முயற்சியினால் மேலே ஏறி வர வேண்டும், அவர்கள் ஆதரவிற்கு கை கொடுப்பார்கள் அவ்வளவுதான். உங்கள் முழு எடையும் தாங்கி அவர்களால் தூக்கி மேலே கொண்டு வர முடியாது.

முழு கல்லில் புதிதாக சிற்பம் செய்வது என்பது, கொஞ்சம் தாமதம் ஆகும். கல்கி போல், நீங்களே உங்களை, உங்களால் முடிந்த வரை செதுக்கிக் கொண்டு சென்றால், அவர்களுக்கு உங்களை சிலையாக மாற்ற சிரமம் இருக்காது.

எனக்கு எந்த பயிற்சி நிலையம் சென்று படிக்கவும் உடன்பாடு இல்லை, நேரமும் இல்லை. எனது அனுபவத்தின் அடிப்படையில் கூறுவது என்றால், முதன்மைத் தேர்வுகள் தவிர்த்து, குரூப் 04, குரூப் 02 (Prelim), VAO,  குரூப்-04 போன்ற தேர்வுகளை நாமாகவே படித்து தேர்ச்சி அடைய முடியும். உங்களுக்கு, கணிதம் தேவைப் பட்டால் மட்டும் பயிற்சி நிலையம் செல்லலாம். கணிதம் நன்றாக வரும் எனும் பட்சத்தில், உங்கள் முழு உழைப்பைக் கொடுத்தால் வீட்டிலேயே உங்கள் வெற்றி நிச்சயம்.

பயிற்சி மையங்கள் எதுவும், உங்களை வீட்டில் இருந்து தூக்கிக் கொண்டு செல்வதில்லை. நீங்கள்தான் விரும்பி இணைகிறீர்கள்.. அவர்களைத் தாண்டி உங்கள் முழுமையான கடின உழைப்பு மிக முக்கியம். அதை தவிர்த்து, அவர் அங்கே படித்தார் வேலை வாங்கி விட்டார், இவர் இங்கே பிடித்தார் வேலை வாங்கி விட்டார் என்று சென்று சேர்வது உங்களுக்கு எந்த விதத்திலும் நன்மையைத் தராது.

No comments:

Post a Comment