Friday, September 19, 2025

மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்

மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்





_*மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான். பூஜியத்திற்கு முன்னாடி நம்பர் இருந்தால் கடவுள் தந்த பரிசு, பூஜியத்திற்கு பின்னாடி நம்பர் இருந்தால் அது கடவுள் கொடுக்கும் சோதனை அதற்கு மதிப்பு கிடையாது.*_

_நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்._

_*மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் அதற்கு கால தாமதமாகலாம் ஆனால் ஒரு போதும் தோற்றுப்போகாது.*_ 

_எனவே இருப்பதை வைத்து திருப்தி அடைவது இல்லாததை இனி கடவுள்_ _கொடுப்பாராக என_ _நம்பிக்கையோடு கடந்து சென்று_
_வாழ்க்கையை_ _சுகமாக்கி_ _கொள்ளுங்கள்._

_*A rare Skill Can help you pay more bills than usual*_

Thursday, August 21, 2025

TNUSRB Sub Inspector Exam Selection New Procedure / சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு & அரசின் நடைமுறை

சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு & அரசின் நடைமுறை


*எஸ். ஐ. தேர்வு புதிய நடைமுறை அமலுக்கு வந்தது காவல்துறை ஒதுக்கீடு கிடையாது என அரசாணையில் தகவல் - இனி அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு நாளிதழ் செய்தி வெளியீடு*







1. ஒதுக்கீடு

80% Open Quota (பொது மக்கள்)

20% Departmental Quota (பணியில் உள்ள போலீஸ் பணியாளர்கள்)

2. தேர்வு முறை

இனிமேல் ஒரே பொதுத்தேர்வு (Common Exam) மட்டும் நடக்கும்.

இருவரும் (Open + Departmental) ஒரே தேர்வில் பங்கேற்க வேண்டும்.

3. மூத்தத்துவம் (Seniority)

Seniority தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

Departmental / Open என்று தனித்த seniority இனிமேல் இருக்காது.

Seniority பட்டியல் புதியதாக திருத்தப்படும்.

4. பழைய பட்டியல் (1995–இருந்து)

பழைய seniority பட்டியல் திருத்தப்படும்.

ஏற்கனவே பதவி உயர்வு (Promotion) பெற்றவர்கள் அந்த நிலைமையில் தொடர்வார்கள்.

Promotion திரும்பப் பெறப்படமாட்டாது.

5. உச்சநீதிமன்ற உத்தரவு (முக்கிய புள்ளிகள்)

60 நாட்களுக்குள் புதிய seniority பட்டியல் தயாரிக்க வேண்டும்.

பழைய பட்டியல் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்யக்கூடாது.

100% ஆட்சேர்ப்பு ஒரே common exam மூலம் நடத்த வேண்டும்.

Departmental + Open quota வேறுபாடு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் நிர்ணயிக்கப்படும்.

6. அரசின் முடிவு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இனி SI ஆட்சேர்ப்பு TNUSRB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) மூலம் Common Exam மூலமாகவே நடத்தப்படும்.

20% Departmental + 80% Open சேர்த்து ஒரே தேர்வு.

மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் seniority நிர்ணயிக்கப்படும்.

புதிய விதிகள் / நடைமுறைகள் வெளியிடப்படும்.

7. நடைமுறைக்கு வரும் உத்தரவு

Director General of Police (DGP) பரிந்துரையின்படி, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) அடுத்தடுத்த SI ஆட்சேர்ப்புகளுக்கு இந்த புதிய நடைமுறையை பின்பற்றும்.

---

👉 சுருக்கமாக:
இனிமேல் சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு 20% departmental quota + 80% open quota சேர்ந்து ஒரே பொதுத்தேர்வில் நடைபெறும். Seniority பட்டியல் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும். பழைய பட்டியல் திருத்தப்படும், ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட promotions ரத்து செய்யப்படமாட்டாது.

Wednesday, August 20, 2025

50 Government Services by Whatsapp / *வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்*

*❇️செய்தி கதம்பம்*❇️
*வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்* 





முதல் கட்டமாக 50 அரசு சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்ப துறை திட்டம்

இதற்காக மெட்டா  நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

50 சேவைகளின் விவரம்
⬇️⬇️⬇️






முதல் கட்டமாக 50 சேவைகள் 


Monday, July 14, 2025

E - Pettagam / E பெட்டகம் மூலம் சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*



*♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.*

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*

*E-பெட்டகம் இணையதளத்தில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது.


Wednesday, November 15, 2023

கந்த சஷ்டி கவசம் / Kantha Sasti Kavasam

கந்த சஷ்டி கவசம் 
நம்மை காக்கும் தெய்வமான முருக பெருமானை நோக்கி பால தேவராயன சுவாமிகள் பாடியது தான் “ கந்த சஷ்டி கவசம் ”.





இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்...

கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக 

ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Thursday, March 9, 2023

முதல்வர் காப்பீடு திட்ட கார்டு / CM NHIS Card

*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*.. 




அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..

காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . 
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி 
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க...

 (குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.) 

பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..

அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... 
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையதுங்கோ...

இந்த பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய்.5 லட்சம் ( மாநில அரசு1 லட்சம் , மத்தியரசு 4லட்சம் )வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

 அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.

இதுல ENT சர்ஜ்சரிஸ் , 
கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்..

எதிர்பாராமல் திடீரென ஏற்படும் தேவைப்படும் நேரத்தில் அங்கும் இங்கும் அலைவதைத் தவிர்த்து 
இப்பவே அலைந்து 
காப்பீடு அட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி : பகிர்வு தகவல்

Tuesday, January 4, 2022

*ஜிடி நாயுடு அவர்களின்**நினைவுநாள் பதிவு*(கிபி 1974 ஜனவரி 4)*

*இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு அவர்களின்*
*நினைவுநாள் பதிவு*
(கிபி 1974 ஜனவரி 4)


✍️கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பதன் சுருக்கமே ஜிடி நாயுடு.
✍️கோயம்புத்தூர் கலங்கல் என்ற கிராமத்தில்
கிபி1893 மார்ச் 23ல் பிறந்தார்.
✍️இளம் வயதிலேயே பல நூல்களை படிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்.
✍️கோவை மோட்டார் தொழிற்சாலையில் பணி சேர்ந்து திறம்பட பணியாற்றினார்.
✍️பின்னர் திருப்பூர் பருத்தி தொழிற்சாலை ஒன்றை சொந்தமாக தொடங்கினார்.
✍️யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கி வெற்றி கண்டார்.
✍️ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவரது கண்டுபிடிப்புகள் பல பரிசுகளைப் பெற்றன.
✍️விவசாயத் துறையிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்தார்.
✍️சுய முயற்சியால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை நிறுவினார்.
✍️இந்தியாவில் முதன்முதலாக மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை
கோயம்புத்தூரில்
நிறுவினார்.
✍️கோவை அவினாசி சாலையில் இவர் கண்டறிந்த பொருட்களின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.
Jaypee🙏

Monday, December 27, 2021

*கக்கன்*

🦉பி.கக்கன் நினைவு நாள்:😢
*************************!
உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடு களுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களேயே ஆரம்பிக்கபட்டது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைப் போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார்

கக்கன். கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு,.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11,000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது

Sunday, December 26, 2021

*ரேஷன் கார்டுகளில் ( RATION CARD) உள்ள சில குறியீடுகள்*

*ரேஷன் கார்டுகளில் ( RATION CARD) உள்ள சில குறியீடுகளுக்கு 
எல்லாம் என்ன பொருள்?


 #PHH

 - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். 

 #phh_aay

 ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். 

 #NPHH

 - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில்
NPHH  என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். 

 #NPHH_S

 ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். 

 #NPHH_NC

 ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்......

#பகிர்வு_பதிவு

*தோழர் இரா. நல்லகண்ணு*

தோழர் இரா. நல்லகண்ணு 

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். 


இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது. 

எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்.1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த நல்லகண்ணுவைக் கைதுசெய்தது போலீஸ். அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீஸார் நடத்திய சித்திரவதையே நல்லகண்ணு மீசையைத் துறக்கக் காரணமானது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் நல்லகண்ணு. நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது. 1999 தென் மாவட்ட கலவரங்களின்போது, ஒரு சாதிக்காரர் கொல்லப்பட்டால், சம்பந்தமே இல்லாமல் எதிர் சாதியில் ஒருவர் கொல்லப்படுவது என்று தொடர் கொலைகள் விழுந்தன. நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான அன்னச்சாமியும் அப்படி வெட்டிக்கொல்லப்பட்டார். நல்லகண்ணு உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். ‘உள்ளூர்க்காரர்கள் செய்திருக்கவே மாட்டார்கள்’ என்று உறுதியாக நின்றார். மாமனார் மரணத்துக்கு அரசு கொடுத்த இழப்பீட்டையும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்துவிட்டார்.

சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடத்ததை, 1985-ல் ‘தாமரை’யில் கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தினார். 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை வாங்கினார்.

மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு, மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார். 1967 மற்றும் 1977 சட்ட மன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999 கோவை மக்களவைத் தேர்தலில் 

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் அதுதான் இந்தியாவிற்கு
தேவை"  என்ற சிந்தனைக்கொண்ட "தோழர்" நல்லக்கண்ணு பிறந்த தினம் இன்று. புதியதாக வந்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அளித்த நாம், இன்றுவரை நல்லக்கண்ணுவிற்கு கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதையே வெளிக்காட்டுகிறது.

`ஒருவேளை தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், நல்லகண்ணு  முதலமைச்சராக இருந்திருப்பார். அது ஒரு பொற்காலமாக இருந்திருக்கும்.”



“இன்னைக்கி இந்த சுத்துவட்டாரமே சாப்பிடுதுன்னு சொன்னா... அது அவராலதான்.” 

“எங்க ஊரையே காப்பாத்துன கடவுள்னுதான் அவரைச் சொல்லணும்.”

Wednesday, July 28, 2021

*ஒலிம்பிக் போட்டி*

*👆உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிக்கான கொடி பிறந்த வரலாறு* உங்களுக்கு தெரியுமா?


இதுகுறித்த ஒரு பார்வை: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உலகத்தின் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஒலிம்பியா நகரத்தில் குழுமினார்கள். போட்டியில் வென்ற வீரர் களுக்கு அந்த காலத்தில் வெற்றியின் சின்னமாக அணிவிக்கப்படும் ஆலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிப்பார்கள்.
வெள்ளை நிறத்தில் உள்ள ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி அமைந்திருக்கும்.
நவீன ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைத்தவரான பியர்ரி டி குபர்டீன் என்பவரால் 1912ம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.
இந்த 5 வளையங்களும், ஆசியா-ஐரோப்பா, ஆப்பிரிக்கா, இரு அமெரிக்கா கண்டங்கள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்களை குறிப்பதாக சமீபகால வரலாறு கூறுகிறது. ஆனால் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற
உலக நாடுகளின் கொடியில் இடம்பெறும் பொதுவான வண்ணங்களைக் கொண்டு வளையங்களுக்கு வண்ணம் தேர்வு செய்யப்பட்டதாக அறியலாம்.
அனைத்து மக்களிடையே விளையாட்டு மூலம் நட்புறவை குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவைதான் இந்த ஒலிம்பிக்கொடி. இதனால்தான் வளையங்கள் பிணைக்கப்பட்டுள்ளன.

Tuesday, December 25, 2018

*அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,*

24.12.18   அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை  விடுமுறைகள்" கட்டுரை வாசித்தேன்.  அது குறித்து அடிப்படையான சில உண்மைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இந்த உண்மைகளை கட்டுரையாளர் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் பத்திரிகை செய்தி ஆசிரியருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.

# 2019 தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு விடுமுறை பட்டியலில்  22 விடுமுறைகளில்  5 நாட்கள் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அமைகிறது.  இந்த ஆண்டு இது குறைவு

#  அதே போல மத விடுப்புகள் பெரும்பாலும் பண்டிகை அரசு விடுமுறை நாட்களிலோ சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அமைகின்றன.

#  ஈட்டிய விடுப்பு அரசு ஊழியர்களுக்கு தான் 30 நாட்கள். ஆசிரியர்களுக்கு  17 நாட்கள் தான். இந்த விடுப்பை துய்க்காமல் ஒப்படைத்தால் பணப்பயன்கள் உண்டு என்கிற காரணத்தால்  90 சதவீத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த விடுப்பை துய்ப்பதில்லை. சேமிக்கவே விரும்புவார்கள்.  இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. 

. # 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் 1 நாள் ஈட்டிய விடுப்பு குறையும்.  28 நாட்களுக்கு மேல் தாண்டினால் மருத்துவர் போர்டு மற்றும் மாவட்ட உயர் அதிகாரியின் அனுமதி பெற்று தான் மீண்டும் பணியில் சேர முடியும்.  மருத்துவ விடுப்புகளால் பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு, பணி வரன்முறை போன்ற தனிப்பட்ட பாதிப்புகள் இருப்பதால் மருத்துவ விடுப்பு மிக அவசியமானால் மட்டுமே துய்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தாலே அதில் 4 நாட்கள் வார விடுமுறையாகும்.
# உள்ளூர் விடுமுறைகள் அனைத்தும் சனிக்கிழ மைகளில் ஈடு செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.

# அரசு தலைவர்கள் இறப்பின் போது விடப்படும் விடுமுறை பாதுகாப்பு கருதியே. ஓய்வு எடுக்க அல்ல.

# தொடக்கப் பள்ளிகள்  220 பணி நாட்கள் , மேல்நிலைப் பள்ளிகள்  210 பணி நாட்கள், கல்லூரிகள்  180 பணி நாட்களுக்கும் குறையாமல் பணியாற்ற வேண்டும் என்பது அரசு விதி. மற்ற அரசு  அலுவலகங்கள் இதை விட அதிக நாட்களே செயல்படுகின்றன.யாரும் மீற முடியாது.இது  வருகைப்பதிவேட்டை பார்த்தாலே தெரியும். இப்படியிருக்கையில் 174 நாட்கள் தான் பணி நாட்கள் என்று கட்டுரையாளர் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

# காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை ஆகியவை மாணவர்கள் மனநலம், கற்கும் திறன்,சோர்வு,உடல்நலன் ஆகியவற்றை யோசித்தே கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் சிபாரிசு செய்யப்படுகிறது  . இந்த  விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை ஊதியம் பெறாமல் பணியாற்ற தயாரா எனக்கேட்கின்றார் கட்டுரையாளர்.  இந்த விடுமுறைக்கு மட்டும் வேறு வேலை தேட முடியுமா?

# தேர்தல் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற சாதாரண விஷயம் கூட கட்டுரையாளருக்கு  நினைவுக்கு வரவில்லை.

# சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டிய கட்டுரையாளர் இந்தியா ஒரு மதசார்பற்ற, நல்லிணக்கம் காட்டும் பல்வகை கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதை மறந்துவிடக்கூடாது.  இங்கே அனைத்து வகையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. 

# அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகளால் அரசுக்கு எவ்வித நஷ்டமுமில்லை

# பல வகை விடுப்புகள் இருந்தாலும் விடுப்பு அனுமதி  கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் காவல்துறை நண்பர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்கின்றோம்.

# விடுப்பு இருந்தும் அதிகாரிகள் /தலைமை ஆசிரிய்ர்கள் அலுவலக நலன் கருதி அனுமதி தராததால் அதை அனுபவிக்க முடியாதவர்கள் ஏராளம்.

# பெரும்பாலானவை ஈராசிரியர் பள்ளிகளாகவே இருப்பதால் விடுப்பு இருந்தாலும் தேவைப்படும்போது துய்க்க முடியாதவர்கள் ஏராளம்.  

# கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு சனி ஞாயிறு  விடுமுறை இரவு பகல் என்பதே  கிடையாது.  மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

# தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு வீட்டுக்கு செல்லாமல் பணியாற்றும் காவல்துறையினர், போக்குவரத்துக்கு ஊழியர்கள் இவருடைய கண்களுக்கு புலப்படவில்லை போலும்.

# சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நகராட்சிக்கு  குடிநீர் வழங்கும் ஊழியர்கள்,  ஆண்டு முழுவதும் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள், மின்சார ஊழியர்கள்..இவர்களை பார்த்த பின்பும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்புவதை என்னவென்பது.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது

ஒரு தரமான நாளிதழ் இதை போல எடுத்தேன் கவிழ்த்தேன் ரக கட்டுரைகளை பிரசுரிப்பது அழகல்ல.

Saturday, December 22, 2018

*போக்ஸோ சட்டம் (Protection of Children from Sexual Offences Act - 2012)*

Group 2  Mains
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.

இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

● போஸ்கோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் உள்ளது. கூடவே அபராதமும் விதிக்கப்படும்.

● போஸ்கோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 ந் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

● போஸ்கோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

●  போஸ்கோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிரை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

● போஸ்கோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

● போஸ்கோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.

●  போஸ்கோ சட்டம் பிரிவு 18ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

●  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.

●   குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருந்ததை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

.
#இந்தியன்_எக்ஸ்பிரஸ்

Thursday, December 20, 2018

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள்*

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி
துறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

*தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?*

*பெரியார் பல்கலை:* எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.

*அழகப்பா பல்கலை:* எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை

*சென்னை பல்கலை:* எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*பாரதியார் பல்கலை:* எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.

*எம்.எஸ்சி.,* படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.

*பாரதிதாசன் பல்கலை:*
எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை

*அண்ணாமலை பல்கலை:* எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:* எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.

*அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:* எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.

இந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டு
உள்ளது.

Tuesday, December 18, 2018

*பிட்காயின் என்றால் என்ன?*

#expected

பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். 1990களில் இறுதியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்க ஆரம்பித்தன. ஆனால் தொடக்கத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. 100 ரூபாயை ஒருவருக்கு அனுப்பினால், அனுப்பப்படும் பைலை வைத்து, மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். அது வங்கிகளுக்கு பிரச்சினையாக உருவெடுத்தது. ஆனால் பிட்காயின் இயங்கும் தொழில்நுட்பமான பிளாக்செயின் மூலம் பல பிரதிகள் எடுக்க முடியாது.

இதை கண்டு பிடித்தது ஒருவரா அல்லது ஒரு குழு உறுப்பினர்களா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் சந்தோஷி நகமோடோ (Satoshi Nakamoto) என்னும் பெயரில் பிட்காயின் மற்றும் அதன் சாப்ட்வேரை இணையதளத்தில் வெளியிட்டார்கள். இந்த தொழில்நுட்பம் மூலம் ஒருவர் மற்றவருக்கு நேரடியாக கரன்ஸியை அனுப்ப முடியும். அனுப்பியது யார் என்றும் தெரியாது, பெறுபவர் யார் என்றும் தெரியாது. இந்த தொழில்நுட்பத்தின் பெயர் பிளாக் செயின். கரன்ஸியின் பெயர் பிட்காயின் இந்த பரிவர்த்தைகளை யாரும் திருட முடியாது.

இருந்தாலும் இந்த பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என்று பெயர். இந்த பரிமாற்றங்கள் ஒரு கணக்கு புதிர் வடிவில் இருக்கும். அதனை சரி செய்யும் பட்சத்தில்தான் பரிமாற்றங்கள் நடக்கின்றன. மைனிங் நிறுவனங்கள் அதனை சரி செய்கின்றன. அதற்கு முன்னால் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பார்ப்போம்.

பிளாக்செயின்

உலகம் முழுக்க பிட்காயின் பரிவர்த்தனைகள் ஒவ்வொரு வினாடிக்கும் நடந்து கொண்டிருக்கும். இதனை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம். அல்லது மற்றவர்களுக்கு அனுப்பலாம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் எங்கு இருப்பவர்களும் வினாடிகளுக்குள் பரிவர்த்தனை செய்ய முடியும்.

இந்த அனைத்து பரிவர்த்தனைகளும் புதிர் வடிவில்தான் இருக்கும். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் நடக்கும் அத்தனை பரிவர்த்தனைகளும் ஒரு லெட்ஜரில் பதிவு செய்யப்படும். அடுத்த பத்த நிமிடங்கள் அடுத்த லெட்ஜரில் பதிவு (https://blockchain.info/) செய்யப்படும். இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புதல் வழங்கும் நிறுவனங்களுக்கு மைனிங் நிறுவனங்கள் என பெயர். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் 12.5 பிட்காயின் இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதுபோல மைனிங் நிறுவனங்கள் பல இருக்கின்றன.

சமீபத்தில் ஐசிஐசிஐ உள்ளிட்ட சில வங்கிகள் இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் பணப்பரிவர்த்தனைகளை சோதனை செய்தது. இந்த தொழில்நுட்பம் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் பகுதி பகுதியாக பாதுகாக்கப்படும்.

எவ்வளவு பிட்காயின்?

ரூபாய் மதிப்பை அதிகபட்சம் 2 தசமங்களாக பிரிக்கலாம். ஆனால் பிட்காயினை எட்டு தசமங்களாக பிரிக்க முடியும். (0.00000001). பிட்காயின் உருவாக்கும் போதே மொத்தம் 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உருவாக்க முடியும் என புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வெளியிடப்படும் பிட்காயின் அளவு ஒவ்வொரு நான்கு வருடத்துக்கும் குறைந்துகொண்டே இருக்கும். அதாவது பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக மைனிங் நிறுவனங்களுக்கு (பத்து நிமிடத்துக்கு) 12.5 பிட்காயின் வழங்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு முதல் இதில் பாதியாக 6.25 பிட்காயின் மட்டுமே வழங்கப்படும். இதை தவிர பிட்காயின் வேறு எந்த ரூபத்திலும் புழக்கத்துக்கு வராது. இந்த அளவிலே பிட்காயின் புழக்கத்துக்கு வரும்பட்சத்தில் 2140-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த பிட்காயினும் சந்தைக்கு வரும். அதன் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்.

மைனிங் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பிட்காயின்களை தவிர மற்றவற்றை எக்ஸ்சேஞ்சில் விற்றுவிடுவார்கள்.

எங்கு வாங்குவது?

பிட்காயின்கள் வாங்க மற்றும் விற்பதற்காக உலகம் முழுவதிலும் எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. இந்தியாவிலும் ஜெப்பே (https://www.zebpay.com/), காயின்செக்யூர் (https://coinsecure.in/), யுனோகாயின் (https://www.unocoin.com/) உள்ளிட்ட எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. அனுப்புவது யார், எடுப்பது யார் என தெரியாததால் முறையற்ற பணம் இங்கு பதுங்க வாய்ப்பு இல்லை. காரணம் இந்த எக்ஸ்சேஞ்ச்கள் ரொக்கமாக வாங்குவதில்லை. இவை அனைத்தும் டிஜிட்டல் கரன்ஸி. தவிர கேஒய்சி இல்லாமல் பிட்காயின் வாங்க முடியாது.

சர்வதேச கரன்ஸி

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான கரன்ஸி இருக்கிறது. ஆனால் பிட்காயின் என்பது சர்வதேச கரன்ஸி. அனைத்து இடங்களுக்கும் இந்த கரன்ஸியை மாற்ற முடியும். இப்போதுதான் இந்த கரன்ஸியை ஒவ்வொரு நிறுவனங்களாக ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் பிட்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் 1,000 டாலருக்கு மேல் வர்த்தகமானது. ரூபாய், டாலராக வைத்திருக்காமல் பிட்காயின் வைத்திருக்கலாம் என்று வாதாடுபவர்களின் நோக்கம் இந்த மதிப்பு.

ரூபாய், டாலரை வைத்து பொருள் வாங்கலாம் பணப்பரிவர்த்தனை செய்யலாம். இதையும் பிட்காயினில் செய்ய முடியும். இருந்தாலும் பிட்காயினுக்காக வாதாடுபவர்கள் சொல்லும் காரணம், ஒவ்வொரு நாடுகள் வெளியிடும் கரன்ஸிகள் மதிப்பில் பெரிய மாற்றம் இருக்காது, ஆனால் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயரும். (குறைந்தபட்சம் 2140 ஆண்டு வரை). அதனால் பிட்காயின் என்னும் சர்வதேச கரன்ஸியை வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

எப்படி பயன்படுத்துவது?

எக்ஸேஞ்ச்கள் வைத்திருக்கும் செயலிகளை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகவரி இருக்கும். ஆனால் அந்த முகவரி நிலையானது அல்ல. அடிக்கடி மாறக்கூடியது. யாருக்காவது பிட்காயின் அனுப்பவேண்டும் என்றால் அப்போதைய அவரின் முகவரி/க்யூஆர்கோட் கேட்டு வாங்கிய பிறகு அனுப்ப வேண்டும். அதேபோல உங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் உங்களின் தற்போதைய முகவரி/க்யூஆர்கோடு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் இதேபோலதான் பரிமாற்றம் நடக்கும்.ஏற்கெனவே கூறியது போல யார் அனுப்பியது, யார் பெற்றது என தெரியாது.

சமீபத்தில் எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் 4 லட்சம் தகவல்கள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இங்கு இதுபோல தகவல் திருடப்பட வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்தியாவில்?

இப்போதுதான் இந்தியாவில் பயன்பாடு தொடங்கி இருக்கிறது. மொபைல் ரீசார்ஜ், டிடிஹெச் ரீசார்ஜ் போன்றவை பிட்காயின் பயன்படுத்தி செய்ய முடியும். பிட்காயினை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. இப்போதைக்கு அதை நெறிபடுத்தும் திட்டமும் இல்லை என கடந்த 2013-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரவர்த்தி தெரிவித்தார். அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் பிட்காயின் ஏற்ற இறக்கம் சிறிது கவலை தருகிறது, அதற்காக பிட்காயினை மொத்தமாக நிராகரிக்கவும் இல்லை என்று கூறினார். ஆனால் இதுவரை பிட்காயின்களுக்கு விதிமுறைகளை வகுக்கவில்லை. பணத்தின் மதிப்பு என்பதே மக்கள் அதை நம்புகிறார்கள் என்பதால் உருவாவது. பிட்காயினை பெரும்பாலானவர்கள் நம்புகிறார்களா என்பதை காலம் தீர்மானிக்கும்